சனி, 31 அக்டோபர், 2009

மனிதக்கோவிலும் [Human Temple], மனிதர்களும் கோவிலும் - திருமந்திரம்!


நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். மனிதர்களை வழிபட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்று நாம் உணரவில்லை. ஆகவேதான் நாம் நம் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கிறோம். தவறில்லை. ஆனால் உணர்ந்து செயல்பட்டால் மிக சிறப்பு.

இந்த படத்தை பாருங்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறது.

நம் திருமூலர் திருமந்திரம் வாயிலாக உரைப்பது என்ன?

"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"

என்று பாடி மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த மாமேதை திருமூலர். இதோடு நின்று விடாது,

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"

என்று பாடியவர் மேலும் கூறுகிறார்,

"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே!

என்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்றே ஏசுகிறார்.

ஆகவே கோவிலுக்கு செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும். நம் உளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல. இது அனைவருக்கும்தான். எனக்கும் சேர்த்துத்தான்.

இந்த கட்டுரையை அறிவியல் தமிழ் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த அறிவை நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டும் என்பதால் பகிர்ந்து கொண்டேன்.
மேலும் படிக்க......

வெள்ளி, 30 அக்டோபர், 2009

பகலில் வானம் ஏன் நீலமாக இருக்கிறது தெரியுமா? சர்.சி.வி.ராமனின் ஒளியின் மூலக்கூறு சிதறல் [Sir.C.V.Raman's Molecular Scattering of Light]

பகல் வானம் ஏன் நீலமாக உள்ளது? இது அனைவரும் தினசரி பார்க்கும் ஒன்றுதான். ஆனால் எத்தனை பேருக்கு அதை ஒரு அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்க்க முடிந்தது. பார்த்தார் ஒருவர். அவர்தான் சர்.சி.வி.ராமன் என்னும் தமிழர். அதன் காரணத்தையும் அவர் கண்டுபிடித்தார். அதுதான் ஒளியின் மூலக்கூறு சிதறல்.

1921 ஆம் ஆண்டு பிரிட்டனில் நிகழ்ந்த ஓர் விஞ்ஞானப் பேரவையில் ராமன் பங்கெடுத்துக் கப்பலில் மீளும் சமயம், ஓர் விஞ்ஞானப் புதிர் அவரது கவனத்தை ஈர்த்தது. கப்பல் மத்திய தரைக் கடல் [Mediterranean Sea] வழியாக ஊர்ந்து செல்கையில், கடல் நீரின் அடர்த்தியான நீல நிறம் அவரது கண்களைக் கவர்ந்து, சிந்தனா சக்தியைத் தூண்டியது! நீலம் நிற கடல் நீரிலிருந்து எப்படி உண்டாகிறது ? அந்த மூல வினாவே அடிப்படையாக இருந்து, ஒளியின் மூலக்கூறுச் சிதறலை [Molecular Scattering of Light] அவர் கண்டு பிடித்து, ராமன் பின்னால் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு 1930ம் வருடம் பெறுவதற்கு ஏதுவாயிற்று!

திரவம், திடவம் அல்லது வாயுவில் உள்ள மூலக்கூறுகள் [Molecules in Liquid, Solid or Gas] தம்முள் ஊடுறுவும் ஒளியை ஓரளவுச் சிதறடித்து, சிதறிய ஒளியின் அலை நீளத்தை [Wavelength] மாறும்படிச் செய்கின்றன. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering], அல்லது ராமன் விளைவு [Raman Effect] என்று பெளதிகத்தில் கூறப் படுகிறது. ராமன் ஒளிநிறப் பட்டை [Raman Spectrum] மூலக்கூறுகளின் அமைப்பைக் [Structure of Molecules] காண உதவுகிறது.

சந்திரசேகர வெங்கட ராமன் 1888 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி நகரில் பிறந்தார். தந்தையார் விசாகப் பட்டணத்தில் கணித, பெளதிகப் பேராசிரியராய் A.V.N. கல்லூரியில் பணி யாற்றி வந்தார். ராமன் முதலில் A.V.N. கல்லூரியில் பயின்றார். அப்போது ராமன் கணிதம், பெளதிக முற்போக்குக் கோட்பாடுகளை [Advanced Concepts of Maths & Physics] எளிதில் புரிந்து ஆழ்ந்து கற்றுக் கொண்டார். அடுத்து சென்னைப் பட்டணம் பிரசிடென்ஸிக் கல்லூரில் படித்து, முதல் வகுப்பில் சிறப்புயர்ச்சி [First Class with Distinction] பெற்று, மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் 1904 இல் B.A. பட்டமும், 1907 இல் M.A. பட்டமும் பெற்றார். ராமன் 16 வயதில் பி.ஏ. படித்த போது சிறப்பாக பெளதிகத்தில் முதல்வராகத் தேறித் தங்கப் பதக்கம் பெற்றார். ராமன் எம்.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போதே அவரது ஈடுபாடு ஒளி, ஒலி ஆராய்ச்சிகளில் [Optics, Acoustics] ஆழ்ந்திருந்தது.

முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.

இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் நாம் படிக்கும் இடம் முக்கியமல்ல என்றும் நமது பகுத்தறியும் திறன்தான் மிக முக்கியம் என்பதே.
மேலும் படிக்க......

புதன், 28 அக்டோபர், 2009

எலும்புருக்கி நோய் [Tuberculosis] தீர தேரையர் வைத்தியம் 1000!

எலும்புருக்கி நோய் மைகோ பாக்டீரியா என்பதால் ஏற்படுவது. இதை தீர்க்க 6 முதல் 24 மாதங்கள் வரை அலோபதியில் தேவைபடுகிறது. ஆனால் நம் மருத்துவ தமிழ் நூலான தேரையர் வைத்தியம் மிகச்சிறப்பான வழிமுறைகளை பாடலாக கூறுகிறது.

மெய்யடா நெரிஞ்சி பிரமி யிலை
வையடா யோர் வகைக்குப் பலமரை
ஐயடா நிம்பழம் போல் திரட்டியே
செய்யடா கற்கண்டு சீனி கூட்டிடே.

கூட்டிடு விள நீரிற் குழப்பியே
மீட்டிடு மிள நீரு மிலாவிட்டால்
ஊட்டிடும் பசும் பாலுற வாகவே
கேட்டிடு மெலும் புருக்கிபோங் கார்த்திடே

உபயோகிக்கும் முறை:

நெருஞ்சில், பிரமி இலை, வகைக்கு அரைப்பலம் அரைத்து வேப்பம்பழம் போல் திரட்டி கற்கண்டு சீனி கூட்டி இளநீரில் குழப்பி உட்கொள். இளநீர் கிடைக்கா விட்டால் பசும்பாலில் குழப்பி உட்கொள், எலும்புருக்கி நோய் தீரும்.

நாம் சிந்திக்க வேண்டியது:

எலும்புருக்கி நோய்க்கு நம் தமிழில் மருந்து இருக்கிறது. அப்படியானால் நம் முன்னோர்கள் எப்படி சிந்தித்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. நாமும் நம் குழந்தைகளை நம் முன்னோர்கள் வழியில் கொண்டு செல்வோமாக.
மேலும் படிக்க......

செவ்வாய், 27 அக்டோபர், 2009

தலைக்குத்துக்கு [Headache] மருந்து

மருத்துவம் அறிந்த சங்கப் புலவர் தாமோதரனார் என்றொருவர் இருந்திருக்கிறார் என்பது அறியப்படுகிறது. அவர் பாடிய பாடல் மருத்துவத்தைக் கூறும் பாடலாக இருக்கக் காணலாம்.

சீந்திற் சருக்கரையும் சுக்குப் பொடியும் தேனுங்கலந்து மோந்தால்' யாருக்குந் தலைவலி நீங்கிவிடும் என்று பாவாணர் உரை வகுக்கின்றார்.

தலைக்குத்து எனும் தலைநோய் நரம்பு மண்டலத்துடன் இணைந்து செயல்படும் மூளையுடன் தொடர்புடையது. இக்கால மருத்துவத்தில் நரம்பு மண்டலக் குறைபாடு (Neurological Deficiency) காரணமாக வரக்கூடிய இனம் காண இயலாத தலைவலிகளை (Unidentified Migraine) மருத்துவர் தாமோதரனார் குறிப்பிடும் ‘தலைக்குத்து' நோய்க்கு இணையாகக் கருதலாம். இந்நோய்த் தீர்வுக்கு மருந்தாக சீந்தில் சருக்கரை, சுக்கு, தேன் இவை மூன்றும் ஆகும். இவை நரம்பு மண்டலங்களின் வலிமைக்குப் பெரிதும் ஊட்டம் அளிப்பவையாகும்" என்று, க. வெங்கடேசன் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார்.
மேலும் படிக்க......

திங்கள், 26 அக்டோபர், 2009

உயிரியற் கொள்கை [Senses]

உலகில் உண்டாகும் உயிர்கள் ஆறுவகையான அறிதல் என்னும் செயலைச் செய்வதாகக் கண்டனர். அவை ஒன்று முதல் ஆறுவகையான அறிதல் என்னும் செயலைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அறிதல் என்பது புலன்களின் தொழிலைக் குறிப்பதாகக் கொள்வர்.

“ஓரறிவாவது, உடம்பினால் உற்றுணர்தல்;
ஈரறிவாவது, உற்றுணர்தல், நாவினால் சுவையறிதல்;
மூவறிவாவது, உற்றுணர்தல், சுவையறிதல், மூக்கினால் முகர்ந்தறிதல்;
நாலறிவாவது, உற்றுணர்தல், சுவையறிதல், முகர்ந்தறிதல் கண்ணினால் கண்டறிதல்;
ஐயறிவாவது, உற்றுணர்தல், சுவையறிதல், முகர்ந்தறிதல், கண்டறிதல், செவியினால் கேட்டறிதல்;
ஆறறிவாவது, ஐம்பொறிகளால் அறியும் ஐம்புல வுணர்வுகளோடு மனத்தினால் சிந்தித்தறிதலும் ஆகிய ஆறறிவினை யுடைய உயிர்களாக முறைப்படுத்தியுள்ளனர்',
என்று தொல் காப்பியம் குறிப்பிடுகிறது.

ஆக தொல்காபியம் ஏற்கனவே ஆறாவது அறிவைப்பற்றி சொல்லி இருக்கிறது என்று தெரிகிறது. அது சரி பகுத்தறியும் திறன் இருந்ததால்தானே இதை பற்றி ஒரு முன்னோடியாக சொல்ல முடிகிறது. நமக்குத்தான்..???
மேலும் படிக்க......

குரல் வளம் [Great Voice] தரும் மருந்து தமிழ் இலக்கியத்தில்!

சேறை. அறிவனார் என்னும் இசை மேதையால் இயற்றப் பெற்றது பஞ்சமரபு. இசை முழவு, தாளம், கூத்து, அபிநயம் என்னும் ஐந்துக்கும் இலக்கணமாக அமைவது. இந்நூல், இசைப் பாடகர்கள் குரல் வளம் பெற மருந்தும் உரைக்கிறது.

திப்பிலி தேன்மிளகு சுக்கினோ டிம்பூரல்
துப்பில்லா ஆன்பால் தலைக்காடைஒப்பில்லா
வெந்நீரும் வெண்ணெயு மெய்ச் சாந்தும் பூசவிவை
மன்னூழி வாழும் மகிழ்ந்து

என்னும் இச்செய்யுள் திப்பிலி, தேன் மிளகு, சுக்கு, இம்பூரல், பசுவின்பால், தலைக்காடை, மெய்ச்சாந்து இவற்றை வெண்ணெய் விட்டு அரைத்து வெந்நீரில் குழைத்துப் பூசிவரக் குரலின் வளம் அதிகப்படும் என்கிறது.

பஞ்சமரபு என்னும் இந்நூல், சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லாரால் அதிகமான மேற்கோள்களுக்காகப் பயன்பட்ட நூல். இது' சிலப்பதிகார காலத்திற்கும் முற்பட்ட சங்க இலக்கியக் காலத்தை ஒட்டிய காலத்தில் தோன்றிய நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க......

வெள்ளி, 23 அக்டோபர், 2009

விரதத்தின் [Fasting] மகிமை!

இன்று கந்தர் ஷஸ்டி விரதம் முடிவுக்கு வரும் நாள். சூரசம்ஹாரம்.. அதாவது சூரபன்மாவை அழிக்கும் நாள். பக்தர்கள் தமது ஒரு வார விரதத்தை கை விடும் நாள்.

அட என்ன விந்தை! இந்த "என் தமிழ்" இடுகையில் அறிவியல் தமிழ் மட்டும்தான் பேசப்படும் என்று நினைந்தோம். ஆனால் இறை முறைகளை பற்றியும் பேசப்படுகிறதே என்கிறீர்களா?

விரதம். அது நம் உடலுக்குள் இயங்கும் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கும், சுத்திகரிப்பதற்கும் உருவான ஒரு அறிவியல் முறை. எப்படி என்கிறீர்களா?

மிருகங்கள் முதற்கொண்டு மனிதர்கள் வரை உடல் நோய்வாய்ப்ப்படும்போது சாபிடாமல் அல்லது குறைந்த உணவு உட்கொள்வது பழக்கம். அதை நாம் ஒரு ஒழுங்கு முறையாக செய்தோமானால் நமது உடல் மீண்டும் நல்ல நிலைக்கு வந்துவிடும். இதுவே உடலின் இயங்கும் முறையாகும். இதற்கு என்ன ஆதாரம் என்கிறீர்களா?

அறிவியலாளர்கள் ஒரு உண்மையை தற்சமயம் கண்டு பிடித்திருக்கிறார்கள். அது என்னவென்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டால் அது எலி உடம்பில் இருக்கும் புற்று நோயின் அளவை குறைக்கிறது. நம்ப முடிய வில்லையா? இந்த வலைத்தளத்தை படியுங்கள் http://www.sciencenews.org/view/generic/id/40242/title/Possible_anticancer_power_in_fasting_every_other_day. ஏன்? இந்த முறையால் நமது புற்றுநோய்க்கு கூட விடை கிடைக்கலாம்.

எனவே வாரத்துக்கு ஒரு முறையாவது உங்கள் உடலுக்கு உணவிடம் இருந்து விடுதலை கொடுங்கள். பிறகு பாருங்கள் வித்தியாசத்தை. ஆனால் சர்க்கரை நோயாளிகள் அவரவர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இதை கடைபிடியுங்கள்.
மேலும் படிக்க......

வியாழன், 22 அக்டோபர், 2009

உணவே மருந்து [Food is Health] : Dr.Kaniappan Padmanaban Ph.D

பண்டைய தமிழிலக்கியங்கள் தமிழர் தம் உணவு முறைகளை எடுத்து விளக்குவதுடன் உணவை உண்பதிலும் உணவைப் பல வகையாகச் சமைத்து உண்பதிலும் முன்னோடியாக விளங்கி நாகரித்தினாலும் பண்பாட்டினாலும் சிறந்து விளங்கியமையைத் தெரிவிக்கிறது.

உயிர் வாழ வேண்டுமானால் உணவு வேண்டும். உணவு இல்லாமல் உயிர் வாழ்தல் என்பது இயலாதது என்பதை உணர்ந்து'

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்" என்று உரைத்தனர்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று தன்னிடமிருக்கும் உணவை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து அவர்களையும் வாழ்விக்கச் செய்யும் பண்பாட்டினைக் கொண்டிருந்தார்கள்.

தமிழர்களின் உணவுமுறைகள் நிலத்தின் அடிப்படையில் வெவ்வேறு வகையினவாக இருந்திருக்கின்றன. தொழில் அடிப் படையிலும், பருவத்துக்கு ஏற்றவாறும்' வயதுக்குத் தக்கவாறும் அமைந்து காணப்படுகிறது.

இன்றும் நம்மிடையே இப்படிப்பட்ட தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் டாக்டர். கனியப்பன் பத்மநாபன் Ph.D. இவர் ஜெர்மனியில் கடந்த 36 வருடங்களாக மருத்துவ நச்சியல் துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவரது பூர்வீகம் தமிழ்நாட்டிலுள்ள சாத்தூர். இவரது கொள்கையும் உணவே மருந்து என்பதுதான். இவர் ஒரு விஞ்ஞானி. இவர் தனது அனுபவங்களையெல்லாம் அவரது இடுகையில் [Blog] பதிந்து வருகிறார். மிக உபயோகமான ஒன்று. நீங்களும் படித்து பாருங்கள். பயனடையுங்கள். http://drkpadmanaban.blogspot.com என்பதே இவரது இடுகை.

மேலும் நாம் நம் உணவை கட்டுபடுத்தினால் கண்ட நோய்களுக்கு உள்ளாகத் தேவையில்லை. எனவே நாம் உணவு பழக்கத்தை கூடிய சீக்கிரம் திருத்திக்கொள்வோமாக.
மேலும் படிக்க......

புதன், 21 அக்டோபர், 2009

மார்பு சளிக்கு கூவைக் கிழங்கு [Arrow Root - Botanical Name "Maranta arundinacea"]

நோயை உண்டாக்கும் பகுதியாக முதலிடம் வகிப்பது வயிறு. அதனை அடுத்து மார்பும் மார்பில் உண்டாகும் சளியுமே என்பது மருத்துவ நூலோரின் கருத்து.

மார்புச் சளி முற்றினால், நோயாக மாறும் வாய்ப்புண்டு என்பதால் அதனைச் சிறிய அளவாக இருக்கும் போதே குணப்படுத்திக் கொள்ள முயல்வர். மார்புச்சளி நோய் முதியவர்களுக்குப் பனிக்காலங்களிலும் மற்றோர்க்குக் கடுமையான நோயினால் பாதிக்கப்படுகின்ற போதும் உண்டாகும்.

இன்றளவும் நாம் அநேகரை பார்க்கலாம். மார்பு சளி என்பது மிக மோசமானது. சிறு குழந்தைகளுக்கு primary complex முதற்கொண்டு பெரியவர்களுக்கு மிக மோசமான ஆஸ்த்மா வரை அனைத்துக்கும் மூல காரணம் இந்த மார்பு சளிதான்.

இந்நோய்க்கான மருந்தாகக் கூவைக் கிழங்கின் மாவு பயன்படுவதாகப் பதார்த்த குண போதினி குறிப்பிடுகிறது. கூவைக் கிழங்கு ஓர் அரிய மருந்தாகக் குறிப்பிடப்படுகிறது. அத்தகைய கூவைக் கிழங்கைப் பழந்தமிழர் பயன்படுத்தியிருக்கின்றனர் என்கிறது மலைபடுகடாம்.

கூவைக்கிழங்கை பற்றி மேலும் அறிய http://en.wikipedia.org/wiki/Arrowroot...
மேலும் படிக்க......

செவ்வாய், 20 அக்டோபர், 2009

ஒட்டு மருத்துவமும் (Plastic Surgery) புறநானூறும்!

இரும்பு உலோகங்களான வேல், வாள்' ஈட்டி போன்ற ஆயுதங்களால் எற்படுகின்ற புண்களில்' இரும்பின் உலோக நஞ்சு கலப்பதற்கு வாய்ப்புகள் உள. அவ்வாறு கலக்க நேர்ந்தால், உலோக நஞ்சால் (Tetanus Toxoid) உடலுக்குத் தீங்கு நேரிடலாம். அவ்வாறு நேராதிருக்க இக்கால மருத்துவர்கள் தடுப்பூசியைப் பயன்படுத்துவர். பண்டைக்கால மருத்துவர்கள் உலோக நஞ்சை முறிக்கும் மருந்தாகவும், புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலைக்கே மாறவும் அத்திப் பால் பயன் படுத்தினர் என்று புறநானூறு குறிப்பிடுகிறது.

‘வடுவின்றி வடிந்த யாக்கையான்,11 என்று பழைய நிலைக்கே உடல்நிலை பெற்றது என்பதை' இன்றைய (Plastic Surgery) ஒட்டு மருத்துவத்துடன் ஒப்பிடலாம்.

அத்திப்பாலும் அத்திப்பட்டையும் கடுப்பு, இரத்தப் போக்கு' சீதளம், முற்றிய இரணம்' மேகம் ஆகிய நோய்களைத் தீர்க்குமென மருத்துவ நூல் உரைக்கக் காண்கிறோம்.

"வீறு கடுப்பிரத்தம் வெண்சீத ரத்தமொடு
நாறுவிர ணங்களெல்லாம் நாடாவாம் கூறுங்கால்
அத்திதரு மேகம்போம் ஆயிழையே! எஞ்ஞான்றும்
அத்திப்பாற் பட்டைக் கறி''12
மேலும் படிக்க......

திங்கள், 19 அக்டோபர், 2009

அறுவை சிகிச்சையும் [Surgery] பதிற்றுப்பத்தும்

போர்க்காலங்களில் போர்வீரர்களுக்கு ஏற்படுகின்ற விழுப்புண் பெரிய அளவில் இருந்தால் அப்புண்ணை மருந்துகளால் ஆற்றுவது கடினம் என்பதை உணர்ந்து' மருத்துவ வல்லார்களால் அப்புண்கள் தைக்கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுக் கட்டுவதும் நிகழ்ந்துள்ளது. இதுவே இன்றைய நாளிலும் நடைமுறையிலுள்ளது. இவ்வாறு, விழுப்புண்ணைத் தைக்கும் முறையைப் பதிற்றுப் பத்து குறிப்பிகிறது.

“மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் ''10

நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளூசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசி.

நாம் சிந்திக்க வேண்டியது
----------------------------------------
பதிற்றுப்பத்து (பத்து + பத்து = பதிற்றுப்பத்து) எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.

இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது. இவ்வளவு தொன்மையான காலத்தில் தமிழன் அறுவை சிகிச்சையை பற்றி சிந்தித்திருக்கிறான் என்றால் நாம் தற்போது இதை வைத்து எவ்வளவு முன்னேறி இருக்கலாம் இத்துறையில். ஆனால் நாம் தற்சமயம் இதை அலோபதிக்கு தாரை வார்த்துக்கொடுத்து விட்டு உக்காந்து இருக்கிறோம். இப்போதும் ஒன்றும் கேட்டு விட வில்லை. நம் அடுத்த தலைமுறைக்கு தமிழின் மகத்துவத்தை சொல்லிக்கொடுப்போம்.
மேலும் படிக்க......

சனி, 17 அக்டோபர், 2009

மூலம் [Piles] மூர்ச்சை அடைய வைக்கிறதா? நம் தமிழ் இருக்க கவலை ஏன்?

இன்றைக்கு உட்கார்ந்தே வேலை பார்ப்பது மற்றும் உணவு கட்டுப்பாடு இல்லாததால் சர்க்கரை நோய்க்கு அடுத்த படியாக அனைவரும் கஷ்டப்ப்படுவது மூலம்தான் [Piles].

இதை விரட்ட அலோபதியில் எத்தனையோ மருந்து மாத்திரைகள் இருந்தாலும் அது தங்கள் ஆசன வாயை பதம் பார்த்து விட்டுத்தான் ஓயும். மேலும் பல பக்க விளைவுகளும் இருக்கும்.

பதார்த்த குணம் - இது நம் தமிழ் சித்தர் எழுதிச்சென்ற ஒரு மருத்துவ தமிழ் நூல். இதில் மூலத்துக்கு ஒரு பாடல் பாடப்பட்டுள்ளது. பின் பற்றித்தான் பார்க்கலாமே. வேப்ப வித்தினால் என்ன பாதகம் வந்து விடப்போகிறது.

பாடல்
-------------
சீறுங் குறைநோயுஞ் சில்விஷமுஞ் சந்நிவகை
ஊறுஞ் சொறிசிரங்கு முண்மூலம் - மிறிவரும்
ஏப்பம் மலக்கிருமி யெல்லா மொழித்திடவே
வேப்பம் விதையை விரும்பு.

மருந்தின் குணம்
-------------------------------
வேப்பம் வித்தினால் குட்டம், சர்ப்ப விஷங்கள், சந்நி, சொறி, சிரங்கு, மூலம், ஏப்பம், மலத்திலுள்ள சிறுகிருமி முதலியவை போகும்.

உணவின் குணம்: செய்முறை மற்றும் உபயோகிக்கும் முறை
---------------------------------------------------------------------------------------------
வேப்பம் விதையை வேளைக்கு 1/2-1 விராகனெடை வெல்லம் கூட்டி அரைத்துத் தினந்தோறும் காலையில் இடைவிடாது ஏழுநாள் சாப்பிட மூலம் போகும். இப்படியே விட்டுவிட்டு நீடித்துச் சாப்பிட்டுக்கொண்டுவரத் தோல் சம்பந்தமான ரோகங்களையும் தேகத்தில் பற்றியுள்ள சூதக சந்நி, நரம்புகளின் இசிவு, குடலில் சஞ்சரிக்கின்ற கிருமி முதலியவற்றையும் குணமாக்கும்.

வேப்பம் விதையை சலம்விட்டு அரைத்துச் சொறி சிரங்கு முதலியவற்றிற்குப் பூசிவர ஆறும். வேப்பம் வித்து, கஸ்தூரிமஞ்சள், வெண்மிளகு கடுக்காய், நெல்லிப்பருப்பு இவற்றைப் பசுவின் பாலில் அரைத்துச் சிரசிற்கிட்டுத் தேய்த்துச் சிறிது நேரம் சென்ற பின் ஸ்நானம் செய்ய எப்பிணிகளையும் வரவொட்டாமல் தடுக்கும். இதற்குப் பஞ்சகற்பம் எனக் கூறுவர்.

நாம் சிந்திக்க வேண்டியது
------------------------------------------
எத்தனை நோய்களுக்கு பாடல்கள் எழுதி சென்றுள்ளனர் நம் தமிழ் சித்தர்கள். நம் குழந்தைகளுக்கு இவற்றை ஆராய்ச்சி செய்ய நாம் நம் வீட்டிலேயே ஒரு சிறிய நூலகம் அமைத்து அவர்களின் தமிழ் ஆராய்ச்சி தாகத்தை தூண்டுவோமாக.
மேலும் படிக்க......

வெள்ளி, 16 அக்டோபர், 2009

தள்ளிப்போகும் கர்ப்பம்... உண்டாவதற்கு தமிழின் மருத்துவ பங்களிப்பு!

இன்று நம் இளைஞ, இளைஞிகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை மலட்டுத்தன்மை. எத்தனை எத்தனை மருத்துவமனைகள். எவ்வளவு செலவுகள். ஆனால் நாமே நம் உடலை அதற்கு முன்னால் பரிட்சித்துக்கொள்ளலாம். சித்தர் தமிழ் அல்லது மருத்துவ தமிழ் என்றொரு மகா காவிய வகைகள் தமிழில் உள்ளது. இதை யாரும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆனால் இன்றளவும் பாட்டி வைத்தியம் என்ற பெயரில் சிலர் கடை பிடிக்கின்றனர். அத்தகைய மருத்துவ தமிழ் நூல்களில் ஒன்றுதான் பதார்த்த குணம். இப்போது மலை வேப்பமர வேர்ப்பட்டை [Botanical Name: Azadirachta indica] என்ற மூலிகையின் குணத்தை பற்றி பதார்த்த குணத்தில் கூறியிருப்பதை பார்ப்போம்.

பாடல் - மலை வேப்பமர வேர்ப் பட்டை
---------------------------------------------------------------------
மலட்டுப் புழுவும் வயிற்றின் வலியு
மலட்டுவாய் வும்போ மடங்கிக் கொலட்டு
முலைவேஞ் சினவேற்கண் ணோதிமமே கேளாய்
மலைவேம்பின் பேரை வழுத்து.

மருந்தின் குணம்
-------------------------------
மலை வேப்பமரத்திற்கு
மலட்டுக்கிருமி
ரத்தகுன்ம ரோகம்
ஓடிஓடிக் குதிக்கின்ற வாதம் ஆகியன விலகும்.

உணவின் குணம்: செய்முறை மற்றும் உபயோகிக்கும் முறை
------------------------------------------------------------------------------------------------
வேப்பமர வேர்ப்பட்டை பச்சை 1 பலம் கொண்டுவந்து பஞ்சுபோல் இடித்து ஒரு குடுவையில் போட்டு முக்கால் படி சலம்விட்டு ஒரு ஆழாக்காக சுண்டக்காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு வேளைக்கு அரைப் பாலடை வீதம் 3 மணி நேரத்திற்கு ஒருமுறையாகக் கொடுத்துவந்து மறுநாள் காலையில் சிற்றாமணக்கெண்ணெய் அல்லது பேதி மருந்து ஏதாவது கொடுக்கக் கிருமிகள் வெளியாகும்.

வேப்ப இலையையும் பூவையும் அரைத்துத் தலைவலிக்கு பூசக் குணமாகும். அரை பலம் பட்டைக்கு கால் படி சலம்விட்டு 1/8 படியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 11/2 அவுன்ஸ் அளவு தினம் 2 வேளை கொடுத்துவரத் தோல் சம்பந்தமான பல ரோகங்கள் குணமாகும். இன்னும் இதனால் கண்டமாலை, குட்டம் முதலியன போம். மலட்டுப் பூச்சி என்னும் கிருமிகளால் கருப்பம் தடைப்பட்ட ஸ்திரீகளுக்கு மாதவிலக்குக் காலத்தில் ஸ்நானம் செய்த 3வது நாள் வேப்ப இலைச்சாற்றை காலையில் ஒருவேளை ஒரு தேக்கரண்டியளவு பாலுடன் கலக்கிக்கொடுக்கக் கிருமிகள் விலகிக் கருப்பம் உண்டாகும். சிலருக்கு வாந்தியும் பேதியும் ஆவதுமுண்டு.

நான் ஒரு பரிந்துரைக்கப்பட்ட மருத்துவனும் அல்ல, அனுபவப்பட்ட வைத்தியனும் அல்ல. எனினும் வேப்ப மாற வேர்ப்பட்டை என்பது நம் உடலுக்கு ஒவ்வாத பொருளும் அல்ல. எனவே நாம் நம் பணத்தை மூட்டை மூடையாக கொண்டு போய் மருத்துவமனையில் கொட்டுவதற்கு முன்னால் இதை முயற்சி செய்து பார்க்கலாமே.

மேலும் என் தமிழ் இடுகையின் நோக்கமே நம் குழந்தைகளுக்கு தமிழை அறிவியல் தமிழாக பார்க்க வைக்க வேண்டும் என்பதே. நம் குழந்தைகளுக்கு நாம் இந்த மருத்துவ தமிழ் நூல்களை வாங்கி படிக்க வைத்தல் வேண்டும். அதுவே நம் குழந்தைகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும்.
மேலும் படிக்க......

புதன், 14 அக்டோபர், 2009

யூகிமுனி வைத்திய காவியம்: உட்குத்து வாய்வு [Gastric] தீர வழி!

நமக்கும் மிகவும் பரிச்சயமான உட்குத்து வாய்வு தீர நாம் அனைவரும் நாடுவது அலோபதி முறையில் தயாரான மருந்து மாத்திரைகளைத்தான். நமது தமிழ் காவியங்களிலே இதற்கு ஒரு பகுதியே உள்ளது. அதை மருத்துவ தமிழ் அல்லது சித்தர் தமிழ் என்று கூறுவோம்.

யூகிமுனி என்ற சித்தர் எழுதிய வைத்திய காவியம் புத்தகம் அப்படிப்பட்ட மருத்துவ தமிழ் வகைகளில் ஒன்று. நாம் நம் குழந்தைகளுக்கு பிறந்த நாள் பரிசாகவோ அல்லது பரிட்சையான தருணங்களில் உற்சாகப்படுத்துவதற்க்காகவோ இந்த புத்தகத்தை வாங்கி பரிசாக அளிக்கலாம். விஷயத்துக்கு வருவோம். வாய்வு தீர யூகிமுனி என்ன வழி கூறுகிறார் என்று பார்ப்போமா?

யூகிமுனி வைத்திய காவியம்
===================================
இரதம்கெந்திவெள்ளுள்ளி இயல்பாம்துரிசுசேங்கொட்டை
சரசம்உறவேவேப்பெண்ணெய் தன்னோடொக்கஅரைத்தெடுத்து
பருகச்சீலையில்தான்தடவிப் பரிவாய்ச்சுருட்டித்தான்கொளுத்தி
விரைவேப்பெண்ணெய்அடிக்கடிதான் மீதேவார்த்துத்தைலமிடே.

இடவேதைலம்காசெடைதான் இஞ்சிச்சாறுமுலைப்பால்நெய்
உடனேஉள்ளேகொள்ளதுவும் உரைத்தவேம்பின்எண்ணெயது
வடிவாய்க்கலந்துதான்கொள்ள மகத்தாம்உட்குத்துவாய்வதுதான்
சுடரோன்தன்முன்பனிபோலச் சொல்லாதோடும்கண்டீரே.

உபயோகிக்கும் முறை:
========================
இரசம், கெந்தகம், பூண்டு, துரிசு, சேங்கொட்டை, ஆகியவற்றை சம அளவு எடுத்து வேப்பெண்ணெய் விட்டு அரைத்து சீலையில் தடவி உருட்டி கொளுத்தி மேலும் மேலும் வேப்பெண்ணெய் விட்டு சுடர்த்தைலம் வாங்கவும். இந்த தைலத்தை காசெடை அளவு இஞ்சிசாறு முலைப்பால், நெய், ஆகியவற்றுடன் உள்ளே கொள்ள உட்குத்து வாய்வு என்பது சூரியனைக் கண்ட பனிபோல மறைத்துவிடும்.

இப்படிப்பட்ட அருமையான மருத்துவ புதையல்கள் நம் குழந்தைகளின் அறிவியல் மனத்தை திறக்கலாம். அவை நாளைய மருத்துவ உலகில் நமது தமிழின் பெயரை உச்சத்திற்கு கொண்டு செல்லலாம் என்பது திண்ணம். ஆகையால் நம் குழந்தைகளுக்கு நம் தமிழை ஆய்வு செய்யும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்பதே நமது குறிகோளாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க......

திங்கள், 12 அக்டோபர், 2009

தசம எண்கள் தமிழர்கள் கண்டு பிடித்ததே!

எல்லோருக்கும் 3/4 முக்கால் என்று தெரியும். ஆனால் எத்தனை பேருக்கு 1/16 அல்லது 3/64 தெரியும்... எண் கணிதத்தில் முழு எண்கள் மற்றும் தசம எண்களை கண்டு பிடித்ததே தமிழர்கள்தாம். வியப்பாக இருக்குமே. மேலே படிக்கவும்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2= அரை
1/4= கால்
1/5= நாளுமா
3/16= மூன்று வீசம்
3/20= மூன்றுமா
1/8= அரைக்கால்
1/10= இருமா
1/16= மாக்காணி (வீசம்)
1/20= ஒருமா
3/64= முக்கால் வீசம்
3/80= முக்கான்
1/32= அரைவீசம்
1/40 = அரைமா
1/64= கால் வீசம்
1/80= காணி
3/320= அரைக்காணி முந்திரி
1/160= அரைக்காணி
1/320= முந்திரி
1/102400= கீழ் முந்திரி
1/2150400= இம்மி
1/2,3654400= மும்மி
1/16,5580800= அணு
1/149,0227200= குணம்
1/745,1136000= பந்தம்
1/4470,6816000= பாகம்
1/31294,7712000= விந்தம்
1/532011,1104000= நாகவிந்தம்
1/7448155,5456000= சிந்தை
1/14,8963110,9120000= கதிர்முனை
1/595,8524436,4800000= குரல்வளைப்பிடி
1/35751,1466188,8000000= வெள்ளம்
1/3575114,6618880,0000000= நுன்மன்ல்
1/2,3238245,3022720,0000000= தேர்த்துகள்

முழு எண்களும் நாம்தான் கண்டு பிடித்திருக்கிறோம். தசம எண்களும் நாம்தான் கண்டு பிடித்திருக்கிறோம். பிறகு ஏன் நம் பக்கம் இருந்து விஞ்ஞானத்தில் நமது பங்களிப்பு மிக குறைவாகவே இருக்கிறது. அதற்க்கு ஒரே காரணம்... நாம் நம் தமிழின் பெருமையை உணரவில்லை. எங்கு ஆராய்ச்சிகள் அதிகமாக உள்ளதோ அங்கே முன்னேற்றம் அதி வேகமாக இருக்கும், வேலை வாய்ப்புக்கள் பெருகும். நாம் இதை உணர்ந்து நம் குழந்தைகளை தமிழை பற்றி ஆராய்ச்சி செய்ய தூண்டுவோமாக.
மேலும் படிக்க......

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

10^22 = தமிழில் என்னவென்று தெரியுமா? எண் முறையில் தமிழர்களே முன்னோடிகள்

வானவியலில் அனைவருக்கும் முன்னோடிகளான தமிழர்களுக்கு மிகப்பெரும் எண்களின் தேவையும் இருந்தது. ஆகையால் எண்களுக்கும் முன்னோடி நாமே. நம்மிடம் இருந்து அரேபியா சென்றது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட எண்களை பற்றி நாம் சிறிது தெரிந்து கொள்வோமா...

1 - ஒன்று - One
10^1 - 10 - பத்து - Ten
10^2 - 100 - நூறு - Hundred
10^3 - 1,000 - ஆயிரம் - Thousand
10^4 - 10,000 - பத்தாயிரம் - Ten Thousand
10^5 - 1,00,000 - நூறாயிரம் - One Lakh
10^6 - 10,00,000 - பத்து நூறாயிரம் - One Million
10^7 - 1,00,00,000 - கோடி - Ten Million
10^8 - 10,00,00,000 - அற்புதம் - Hundred Million
10^9 - 1,00,00,00,000 - நிகற்புதம் - One Billion
10^10 - 10,00,00,00,000 - கும்பம் - Ten Billion
10^11 - 1,00,00,00,00,000 - கணம் - Hundred Billion
10^12 - 10,00,00,00,00,000 - கற்பம் - One Trillion
10^13 - 1,00,00,00,00,00,000 - நிகற்பம் - Ten Trillion
10^14 - 10,00,00,00,00,00,000 - பதுமம் - Hundred Trillion
10^15 - 1,00,00,00,00,00,00,000 - சங்கம் - One Zillion
10^16 - 10,00,00,00,00,00,00,000 - வெல்லம் - Ten Zillion
10^17 - 1,00,00,00,00,00,00,00,000 - அன்னியம் - Hundred Zillion
10^18 - 10,00,00,00,00,00,00,00,000 - அர்த்தம் - One Quintillion
10^19 - 1,00,00,00,00,00,00,00,00,000 - பரார்த்தம் - Ten Quintillion
10^20 - 10,00,00,00,00,00,00,00,00,000 - பூரியம் - Hundred Quintillion
10^21 - 1,00,00,00,00,00,00,00,00,00,000 - முக்கோடி - One Sextillion
10^22 - 10,00,00,00,00,00,00,00,00,00,000 - மகாயுகம் - Ten Sextillion

இன்னும் மகாதோரை, மகாநிகற்பம், மகாமகரம், மகாவரி, மகாவற்புதம், மகாவுற்பலம், பிரம்மகற்பம், கமலம், பல்லம், பெகுலம், தேவகோடி, விற்கோடி, மகாவேணு, தோழம், பற்பம், கணனை எனும் தமிழ் வார்த்தைகள் உள்ளன. இவையும் மிகப்பெரிய எண்களை குறிப்பிடுவதற்காக உள்ளவையே. ஆனால் எதற்காக என்பது அவ்வளவு சரியாக தெரியவில்லை.

எண்களை அடிப்படையாக கொண்டு இந்த பூவுலகில் எவ்வளவோ சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. ஆனால் நம்மவர்களின் சாதனை தற்சமயம் எதுவும் இல்லை. அநேகர் இருந்தாலும் கணித மேதை ராமானுஜர் ஒருவர் மட்டுமே 20ம் நூற்றாண்டில் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருகிறார். நாம் தற்சமயம் 21ம் நூற்றாண்டில் உள்ளோம். இது சற்று அதிக வருடங்களாக உங்களுக்கு தோன்றவில்லை. நம் குழந்தைகளாவது தமிழ் எண்களை பற்றி ஆராய்ச்சி செய்து மேலும் இச்சமுதாயத்துக்கு பலன் அளிக்கும் வியத்தகு பங்களிப்பினை செய்ய நாம் உத்வேகம் கொடுக்க வேண்டும்.
மேலும் படிக்க......

வெள்ளி, 9 அக்டோபர், 2009

நாழிகை, விநாழிகை, லிப்தம், விலிப்தம், பரா, தத்பரா தெரியுமா?

இந்த சொற்களை கேள்விப்பட்டு இருகிறீர்களா? இவை நம் மூதாதையர்கள் காலத்தை அளக்க பயன்படுத்திய அளவைகள். ஆச்சர்யமாக உள்ளதா? கீழே படியுங்கள்.

---------------------------------------
1 நாள் = 60 நாழிகை
---------------------------------------
24 மணி
1 மணி = 2.5 நாழிகை = 60 நிமிடங்கள்
1 நாழிகை = 24 நிமிடங்கள்

---------------------------------------------
1 நாழிகை = 60 விநாழிகை
---------------------------------------------
24 நிமிடங்கள்
1 நிமிடம் = 2.5 விநாழிகை = 60 விநாடிகள்
1 விநாழிகை = 24 விநாடிகள்

------------------------------------------
1 விநாழிகை = 60 லிப்தம்
------------------------------------------
24 விநாடிகள்
1 விநாடி = 2.5 லிப்தம் = 100 செண்டி விநாடிகள்
1 லிப்தம் = 40 செண்டி விநாடிகள்

------------------------------------------
1 லிப்தம் = 60 விலிப்தம்
------------------------------------------
40 செண்டி விநாடிகள்
1 செண்டி விநாடி = 1.5 விலிப்தம் = 10 மில்லி விநாடிகள்
1 விலிப்தம் = 6.6666 அல்லது 6.7 மில்லி விநாடிகள்

-------------------------------------
1 விலிப்தம் = 60 பரா
-------------------------------------
6.7 மில்லி விநாடிகள்
1 மில்லி விநாடி = 8.95 அல்லது 9 பரா = 1000 மைக்ரோ விநாடிகள்
1 பரா = 111 மைக்ரோ விநாடிகள்

-------------------------------
1 பரா = 60 தத்பரா
-------------------------------
111 மைக்ரோ விநாடிகள்
1 மைக்ரோ விநாடி = .5 தத்பரா = 1000 நானோ விநாடிகள்
1 தத்பரா = 2000 நானோ விநாடிகள்

இது நம் மூதாதையர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே எழுதி வைத்தது. மில்லி, மைக்ரோ மற்றும் நானோ விநாடிகள் அனைத்தும் தற்சமயமே வந்தது. அப்படியானால் நம்மவர்கள் காலத்தை மிகத் துல்லியமாக அளக்க அப்பொழுதே அளவைகளை உருவாகியுள்ளனர் என்பது திண்ணம்.

நம் குழந்தைகளுக்கும் நம் தமிழை ஆராய்ச்சி செய்ய உதவுங்கள் பெற்றோர்களே.
மேலும் படிக்க......

வியாழன், 8 அக்டோபர், 2009

தமிழகத்தை சேர்ந்த டாக்டர். வெங்கி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நோபெல் பரிசு 2009

ஓர் உளம் மகிழும் நற்செய்தி. தமிழத்தில் பிறந்து அமெரிக்காவில் இருக்கும் டாக்டர். வெங்கி ராமகிருஷ்ணன் [வயது 58] அவர்களுக்கு வேதியலில் 2009ம் வருடத்துக்கான நோபெல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. நம் தமிழகத்தில் இருந்து இது 3வது முறை. 1930ல் திரு.சர்.சி.வி.இராமன் அவர்களுக்கும் 1983ல் டாக்டர். எஸ். சந்திரசேகர் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் மேலும் பெருமைப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் டாக்டர். வெங்கி ராமகிருஷ்ணன் அவர்கள் சிறு வயதில் சிதம்பரத்தில் படித்தவர் ஆவார். அவர் மேலும் கூறுகிறார், இந்த அறிவியல் பாடத்தில் எனக்கு இந்த அளவுக்கு ஆர்வம் வருவதற்கு நான் படித்த உயர் நிலை பள்ளியே காரணம் மற்றும் எனது பெற்றோர்கள் இருவரும் சிறந்த அறிவியலாளர்கள் என்கிறார்.

இதில் இருந்து நாம் படித்துக்கொள்ளும் பாடம் என்னவென்றால் நமது குழந்தை பிராயம் மிகவும் முக்கியமானது. அதில் நாம் எந்த அளவுக்கு குழந்தைகளுக்கு அறிவு தாகத்தை ஊட்டுகிறோமோ அந்த அளவுக்கு நம் குழந்தைகள் சாதிக்கும். அந்த அறிவு தாகத்தை நம் தமிழ் அவர்களுக்கு தணிக்கும்.

இந்த முக்கியமான வேளையில் நாம் டாக்டர். ராமகிருஷ்ணன் அவர்களை உளமார வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறோம்.அனைவரும் வாழ்த்துவோம்.

மேலும் இது பற்றிய விவரங்களுக்கு http://timesofindia.indiatimes.com/world/uk/India-born-scientist-wins-Nobel-Prize-in-Chemistry/articleshow/5099608.cms மற்றும் http://economictimes.indiatimes.com/news/politics/nation/Nobel-prize-winner-Venki-Ramakrishnan-makes-TN-proud/articleshow/5099135.cms
மேலும் படிக்க......

புதன், 7 அக்டோபர், 2009

விமானத்தை கண்டு பிடித்தது ரைட் சகோதரர்களா அல்லது இராவணனா?

விமானத்தை கண்டு பிடித்தது யார்? நம் ஊர் குழந்தைகள் உள்பட அனைவரும் சொல்வது ரைட் சகோதரர்கள்...

ஆனால் உண்மை அதுவா... வரலாறு நமக்கு வேறு சொல்கிறதே! நமது இராமாயணத்தில் சீதையை இலங்கை வேந்தன் இராவணன் [தமிழ் மன்னன்] கடத்திச்செல்வதற்கு புஷ்பக விமானத்தில் கடத்திச்சென்றதாக உள்ளது.

இராமாயணம் கதையா அல்லது உண்மையா என்ற விவாதத்திற்கு நாம் தற்போது செல்ல வேண்டாம். விமானம் என்ற வார்த்தை எப்படி உருவானது? மேலும் அது நின்ற இடத்தில் இருந்தே உயரே மேலெழும்பி தென் திசை நோக்கிச்சென்றதாக குறிப்பிடப்படுகிறது. இப்படி பார்க்கையில் அது ஹெலிகாப்டர் ஆகக்கூட இருக்க முடியும் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.

இப்படி இருக்கையில் நாம் இன்று விமானத்தை கண்டு பிடித்த பெருமையை ரைட் சகோதரர்களுக்கு விட்டுக்கொடுத்துள்ளோம். ஏனெனில் நமக்கு நமது கையில் இருக்கும் தமிழ்ப்புதையலின் அருமை தெரியவில்லை. இல்லையென்றால் நாம் நமது தமிழ் பெட்டகங்களை படித்து ஆராய்ச்சி செய்து நமது பெயரை உலக அரங்கில் பல முறை பதிவு செய்திருக்க மாட்டோமா?

எனவே நாம் நமது குழந்தைகளை நம் தமிழ் புத்தகங்களை, இலக்கியங்களை, இதிகாசங்களை, வரலாறுகளை ஆராய்ச்சி செய்ய உந்து சக்தி கொடுத்தல் வேண்டும். அடுத்த தலைமுறையாவது தமிழை அதன் தொன்மைக்காக மட்டும் மதிக்காமல் அதன் சமுதாய பங்களிப்புக்காகவும் மதிக்குமாறு செய்தல் வேண்டும்.
மேலும் படிக்க......

செவ்வாய், 6 அக்டோபர், 2009

கார்பன் டை ஆக்சைடும் பேயும் ஒன்றா?

இன்று 30 வயதிற்கு மேல் இருக்கும் அனைவருக்கும் இந்த வாக்கியம் நினைவிருக்கும். நம் பெற்றோர்கள் நம்மிடம், "ஏய் அந்த மரத்தடியில் ராத்திரி படுக்காதே, பேய் பிடித்து விடும்" என்று மிரட்டுவர். இது நம் முன்னோர்களிடம் இருந்து நம் பெற்றோர்கள் தெரிந்து கொண்டது. இன்று நம்மில் எத்தனை பேருக்கு இந்த வாக்கியத்தை நம் குழந்தைகளிடம் சொல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அல்லது சொல்லி இருக்கிறோம்.

இங்கு பேய் என்பது பேயுமல்ல, மிரட்டல் என்பது மிரட்டலுமல்ல. அதில் ஒரு அறிவியல் உண்மை உள்ளது.

இரவில் மரங்கள் கெட்ட வாயுவை [கார்பன் டை ஆக்சைட்] வெளியிடும் என்பதே அது. இந்த வாயுக்கள் நம் உடம்புக்கு நல்லது அல்ல என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை.

நாம் இந்த அறிவியல் உண்மையையாவது நம் குழந்தைகளுக்கு சொல்லி இருக்கிறோமா? அதிகப்படியாக இருக்காது என்றே நம்புகிறேன். மேலும் இரவில் மரங்கள் கெட்ட வாயுவை வெளியிடுகின்றன என்பது நம் முன்னோர்களுக்கு எப்படி தெரிந்தது? சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வி அல்லவா. ஆக நம் முன்னோர்கள் நமக்கு முன்னால் என்னவெல்லாம் கண்டு பிடித்து வைத்திருந்தார்கள் என்று எண்ணும்போது வியப்பே மேலிடுகிறது.
மேலும் படிக்க......

திங்கள், 5 அக்டோபர், 2009

சோதிடக்கலையும் வானவியலும் ஒன்றா?

தமிழில் சோதிடக்கலை என்று ஒன்று உண்டு. இன்று அதை நம்புவோர் ஒரு கூட்டமும் அதை மூட நம்பிக்கை எனப்படுவோர் ஒரு கூட்டமுமாக பிரிந்துள்ளனர். சோதிடர்களும் அதை ஒரு தொழிலாக செய்கின்றனரே தவிர்த்து அதை ஒரு பாடமாக படித்து செய்ய மறுக்கின்றனர். ஏனெனில் பாடமாக படித்து அதை செய்வதென்றால் செலவும் ஆகும், வருமானம் செய்யும் காலமும் குறையும். ஆனால் நாம் எதை இழந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா? நம் முன்னோர்கள் நமக்காக உருவாக்கி வைத்திருந்த வானவியல் பாடங்களை. நான் கூறுவதற்கு சில ஆதாரங்களை கூறுகிறேன்.


சோதிடத்தில் 12 கட்டங்கள் உண்டு. சனி என்றொரு கிரகமும் உண்டு. அனைத்து கட்டங்களுக்கு நடுவில் சூரியனும் உண்டு. நம் சோதிடக்கலையில் ஒரு கணக்கு உண்டு. அது என்னவென்றால், சனி கிரகமானது ஒரு கட்டத்தில் இருந்து இன்னொரு கட்டத்துக்கு போவதற்கு 2.5 வருடங்கள் ஆகும். இப்படியாக சனி கிரகம் 12 கட்டங்களையும் சுற்றி முடிக்க 30௦ வருடங்கள் ஆகின்றன.

நமது இன்றைய அறிவியலில் சனி கிரகமானது சூரியனை சுற்றி வர 30௦ வருடங்கள் ஆகின்றன என்று கண்டு பிடித்திருக்கின்றனர்.

எனது கேள்வி என்னவென்றால் நாம் எதற்காக எதை இழக்கிறோம் என்பதுதான். சோதிடம் மூட நம்பிக்கை என்று சொல்வது இன்று ஒரு பெருமை ஆகி விட்டது. ஆனால் நாம் நம் அடிப்படை வானவியலை இழந்து கொண்டிருக்கிறோம். என்னால் இந்த ஒரு உதாரணத்தை தவிர வேறு பல உதாரணங்களும் தர முடியும். ஒன்று, செவ்வாய் [Mars] கிரகத்தின் நிறம் சிவப்பு. இது சோதிடத்திலும் அறிவியலிலும் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு உண்மை.

நாம் நம் குழந்தைகளுக்கு வானவியலை சொல்லித்தர வேண்டாமா? நம் குழந்தைகளை நாம் சோதிடத்தில் முனைவர் பட்டம் [Ph.D] வாங்க நாம் தூண்டலாம். சிந்தியுங்கள், செயல் படுங்கள். நம் தமிழ் நம்மை கண்டிப்பாக வாழ வைக்கும், நம் குழந்தைகளையும்தான்...
மேலும் படிக்க......

அறிவே கடவுள்!

அறிவு வடிவு என்று அறியாத என்னை
அறிவு வடிவு என்று அருள் செய்தான் நந்தி

மற்றும்

அறிவுக்கு அழிவும் இல்லை ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவு அல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிதின்றது என்றிட்டு
அறைகின்றன மறை ஈறுகள் தாமே.


என்று கூறுகின்றார் திருமூலர். நாம் நம் குழந்தைகளை அறிவு பூர்வமாக வளர்க்க மிகவும் பாடு படுகிறோம். அவர்களை விளையாட்டு பள்ளிகளில் மிகச்சிறு வயதிலேயே கொண்டு அடைக்கிறோம். ஏனென்று கேட்டால் அறிவு சிறு வயதிலேயே சிறப்பாக விருதியாகுமாம். ஆனால் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அறிவும் ஒழுக்கமும் இணைந்து ஒரு குழந்தை வளர்ந்தால்தான் அது நம் வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும். ஆகையால் நம் குழந்தைகளுக்கு நாம் அறிவின் முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுக்க வேண்டும். அதோடு இணைந்து ஒழுக்கமும் ஊட்டப்படவேண்டும்.

ஆக அறிவே கடவுள் என்று நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்தால் அறிவை பற்றிய அறிவு வளரும். அறிவே அறிவை அறிகின்றது என்ற திருமூலரின் வார்த்தைகளை நினைவில் கூர்வோமாக.
மேலும் படிக்க......

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

திருமந்திரம் - திருமூலர்: அன்பே சிவமும், ஒன்று பூஜ்யமாவதும்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருப்பாரே!.

இதில் நாம் ஒன்று பூஜ்யமாவது எப்படி என்பதை நமது எதிர் கால தலைமுறைக்கு இரு வகைகளில் எடுத்துரைப்போம். ஒன்று நமது இறை வழிப்படி. மற்றொன்று அறிவியல் முறைப்படி.

நாம் இப்போது திருமூலரின் திருமந்திரத்தை படிப்போம். நாம் அன்பு என்று நினைப்பது அன்பாகாது. ஆனால் இந்த அன்பில்தான் கடவுளும் இருக்கின்றார். எப்படி?இந்த கலியுக அன்பில் சிறு மாற்றம் செயதோமேன்றால் நாம் உண்மையான அன்பை இனம் காணலாம். அன்பு என்பது தாய்மை. தாய்மை என்பது தூய்மை. அது அப்பழுக்கு அற்றது. அது தன்னலம் அற்றது. அது எதுவுமே அற்றது. எனவே நாம் அன்பையும் சூனியம் எனலாம். என்று நாம் அத்தகைய அன்பை பெறுகிறோமோ அன்றே நாம் சிவமாகிறோம். அதாவது கடவுள் ஆகிறோம்.

முதலாவதாக அறிவியல் முறையில்,

நாம் அன்பை ஒன்று என்று எடுத்துக்கொள்வோம். சிவத்தை பூஜ்யம் அல்லது சூனியம் என்று எடுத்துக்கொள்வோம்.

கணித முறைப்படி ஒன்றிலுருந்து ஒன்றைக்கழித்தோமென்றால் நமக்கு பூஜ்யம் கிடைக்கும்.

அதே முறையில் இறை வழிப்படி,

உன்னிலிருந்து உன்னை கழித்தோமென்றால் [அதாவது உன்னிலிருந்து நான் என்ற ஆணவத்தை] நாம் கடவுளை அதாவது அளவிலா அன்பை அடையலாம்.

நாம் நம் எதிர்கால தலைமுறைக்கு எப்படி வேண்டுமென்றாலும் இதை சொல்லிக்கொடுக்கலாம். ஆனால் நாம் இயற்பியலையும், அறிவியலையும், கணிதத்தையும் தமிழோடு சொல்லிக்கொடுத்தொமென்றால் அதை விட நமது குழந்தைகளுக்கு வேறொன்றும் நன்மை பயக்கப்போவதில்லை.
மேலும் படிக்க......