இன்று அறிவியல் கூற்றுப்படியும் சித்தாந்த கூற்றுப்படியும் கடவுள் என்பதற்கு தெளிவான விளக்கங்கள் இல்லை அல்லது தெரியவில்லை அல்லது புரியவில்லை.
இதே போல் கருந்துளைக்கும் [Black Hole] விளக்கங்கள் இல்லை. எவ்வளவோ ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதானிருக்கிறது. இது வரையில் முன்னேற்றம் இல்லை.
சிலர் கூறுகிறார்கள். கருந்துளைக்குள்ளே சென்று பார்த்தோமென்றால் வேறொரு உலகம் இருக்கலாம். மேலும் அதன் உள்ளே செல்லும் தகவல்கள் அழிவதில்லை என்று புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங்க் [Stephen Hawking] கூறுகிறார். [ஆ.
http://physicsworld.com/cws/article/news/34239]. ஆனால் இன்னும் அது நிரூபிக்கப்படவில்லை.
எனக்கு ஒரு சிந்தனை. எப்படி அதனுள்ளே சென்று விட்டு வெளியே வருவது. அப்படி ஒருக்கால் உள்ளே கடவுள் இருந்தாரென்றால் அவரிடம் என்ன கேட்பது என்று?
அப்படியென்றால் எனக்கு ஒரு வாகனம் வேண்டும். அது கருந்துளையின் ஈர்ப்பு விசையை காட்டிலும் வேகமாக செல்லக்கூடியதாக இருக்க வேண்டும். அதை எப்படி கண்டு பிடிப்பது? கருந்துளையின் புவி ஈர்ப்பு விசை என்னவென்று தெரிந்தால்தானே என்னால் அதற்கேற்றாற்போல் வாகனம் தயாரிக்க முடியும்.
பழைய தமிழ் புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு விடயம் பளிச்சென்று என் மனதில் தங்கியது. அது என்னவென்றால்,
சூரிய சித்தாந்தப்படி கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் எனப்படும் நான்கு யுகங்களைக்கொண்டது ஒரு சதுர்யுகம்.
1 சதுர்யுகம் - 43,20,000 ஆண்டுகள்
71 சதுர்யுகங்கள் - 1 மன்வந்தரம்
14 மன்வந்தரங்கள் - 1 கல்பம்
1 கல்பம் - 1/2 நாள் [நமக்கல்ல அன்பர்களே, படைப்பு கடவுள் பிரம்மாவுக்கு]
இப்போது நாம் இந்த இரண்டு விடயங்களை வைத்து சிறிது யோசிப்போமே. கருந்துளைக்கு பின்னால் கடவுள் இருக்கிறாரென்று வைத்து கொள்வோம். இப்போது கடவுளை அடைவதற்கு வாகனம் தயாரிக்க வேண்டும் மற்றும் அதன் வேகம் எப்படி இருக்க வேண்டும்.
உலகத்தில் தற்போது சூப்பர்சோனிக் [Supersonic] வாகனங்கள்தான் வேகமானது. இது ஒலியின் [Sound] வேகத்திற்கு ஈடாக செல்லும். அதாவது வினாடிக்கு 340.29 மீட்டர். இதற்கும் மேலே ஒளியின் [Light] வேகம் உள்ளது. அது என்னவென்றால் வினாடிக்கு 29,97,92,458 மீட்டர் அல்லது 2,99,792.458 கிலோமீட்டர் .
நம் அனைவருக்கும் தெரியும் ஒளியின் வேகம் கூட கருந்துளையின் உள்ளே செல்லும் ஆனால் வெளியே வராது. ஆகவே நாம் அதையும் மீறிச்செல்லும் ஒரு வாகனத்தை தயாரித்தால் ஒழிய நம்மால் கருந்துளைக்கு உள்ளே சென்று வெளியே வர முடியாது என்பதே திண்ணம்.
இப்போது நமது வாகனத்தின் வேகம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும். இப்போது பிரம்மாவுக்கு 1 கல்பம் 1/2 நாள் [அதாவது அவர் இந்த வேகத்தில் முன் சென்று கொண்டிருக்கிறார் என்று எடுத்துகொள்வோம்.] என்றால் நாம் அதை விட வேகமாக செல்லும் ஒரு வாகனத்தை கண்டு பிடிக்கவேண்டும். இதை கணித ரீதியாக பார்க்கலாமே.
1) ஒரு ஒளி வருடம் என்பது 94,60,73,04,72,580.8 கிலோமீட்டர்
2) பிரம்மாவின் 1/2 நாள் என்பது 1 கல்பம். ஆண்டுகளில் இதை மாற்றினோமென்றால் மொத்தம் 4,29,40,80,000 ஆண்டுகள். இதை ஒரு வினாடிக்கு மாற்றினோமென்றால் 18,55,04,25,60,00,000 வினாடிகள். அதாவது ஒரு வினாடிக்கு பிரம்மாவுக்கு இவ்வளவு வேகத்தில் வயதாகிறது.
3) ஒரு ஒளி வருடத்தை ஒளியின் வேகத்தில் சென்றால் 3,15,57,600 வினாடிகளில் [36,458 நாள்கள் அல்லது 99.81861366078701 வருடங்கள்] சென்றடையலாம்
4) இப்போது நாம் பிரம்மாவின் வேகத்தை [அதாவது 18,55,04,25,60,00,000 வினாடிகள்] ஒளி வருடமாக மாற்றிக்கொள்ளலாம். அப்படி மாற்றினால் 19.60781... ஒளி வருடங்கள் வருகிறது.
சுருங்கச்சொல்வதானால் இந்த தொலைவை நாம் அரை நாளில் கடந்தோமேன்றால் பிரம்மாவை அவரது வேகத்தில் கூடவே சென்று பார்த்து வரலாம். மேலும் இந்த கட்டுரையின் மூலமாக நான் சொல்ல வருவது என்னவென்றால் நாம் பிரம்மாவை பார்க்கிறோமோ இல்லையோ கருந்துளையின் உள்ளே என்ன இருக்கிறது என்றாவது பார்த்து விட்டு வரலாம் என்பதே.
இதை கேட்டு விட்டு என் நண்பன் சிரித்தான். என்னவென்று கேட்டேன்? அவன் இந்த வண்டி தயாரிப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்றான்? நான் தெரியவில்லை என்றேன்? அவன் மேலும் சிரித்து விட்டு இவ்வளவு கஷ்டப்பட்டு வண்டி தயாரித்து அதில் ஏறி நீ பிரம்மாவை பார்ப்பதற்கு நம்ம ஊர் பஸ் ஒன்றின் அடியில் போய் விழு, கடவுளிடம் உடனே போய் சேருவாய் என்று கூறி கட கடவென்று சிரித்தான்.
என்ன சொல்வது? நம்ம ஊரில் அறிவுக்கு மதிப்பில்லையே? இருந்தாலும் அவனின் நேரத்திற்கேற்றாற்போல் நகைப்பை ஏற்படுத்தும் பேச்சை ரசித்தேன்.
எனது இந்த கணக்குகளில் ஏதேனும் தப்பிருக்கலாம். ஆனால் எனது சிந்தனையில் பிழையிருப்பதாக நான் நினைக்கவில்லை. அனைவரது கருத்துக்களையும் வரவேற்கிறேன்.
மேலும் படிக்க......