நரம்பு தளர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நரம்பு தளர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

கருப்பட்டியும் சென்னையும்!!!



கருப்பட்டி... இந்த வார்த்தையை கேட்டால் அனைத்து தமிழர்களுக்கும் நாவில் எச்சில் ஊறும். ஆனால் இன்றோ அதன் நிலை என்ன? கீழ்க்கண்ட அனுபவங்களில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

இடம் 1: சரவணா ஸ்டோர்ஸ், பலசரக்கு பிரிவு, தி.நகர், சென்னை. நான் அவரிடம் கருப்பட்டி இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை என்று சொல்லியிருந்தால் கூட மனம் வெறுத்திருக்க மாட்டேன். ஆனால் அவர் என்ன கேட்டார் தெரியுமா? கருப்பட்டி என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? நான் பதில் பேச கூட தெம்பில்லாமல் அங்கிருந்து நகர்ந்து வந்து விட்டேன்.

இடம் 2: மளிகை கடை, அரும்பாக்கம், சென்னை. நான் கடைகாரரிடம் கருப்பட்டி இருக்கிறதா என்று கேட்டேன். அவரும் அது என்ன என்று கேட்டார். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத சக்திக்குமரன் [அதாங்க நாந்தேன்...] கருப்பட்டியை பற்றி விளக்க ஆரம்பித்தான். அது வெல்லம் போல இருக்கும், கருப்பாக இருக்கும் என்று காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பை போல அதன் அங்க அடையாளங்களை பற்றி விளக்க ஆரம்பித்தான். அவரும் நான் நாளைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார். நானும் அடுத்த நாள் சென்றேன். அவரும் எடுத்து கொடுத்து விட்டு 100gm ரூ.20/- என்றார். நான் திடுக்கிட்டு மதுரையில் கிலோவே ரூ.90/- தானே. நீங்கள் சொல்வதை பார்த்தால் கிலோ ரூ.200/-க்கு சொல்கிறீர்களே என்றேன். அதற்கு அவர் என்ன கூறினார் தெரியுமா? கிடைக்காத பொருளென்றால் அப்படித்தான் என்றார்.

இதிலிருந்து எனக்கு விளங்குவது என்னவென்றால்,

1) கருப்பட்டியை தமிழர்கள் மறக்க தொடங்கி விட்டார்கள், அல்லது
2) சத்தமில்லாமல் இந்த உலகத்தை விட்டு கருப்பட்டியை ஒழிக்க தொடங்கி விட்டார்கள்

கருப்பட்டி... மிக சிறந்த இனிப்பு பலகாரங்களுக்கு உதவும் ஒரு பொருள் மட்டுமல்ல. அது மருத்துவ குணங்களும் நிறைந்தது.

1) சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்
2) அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

இப்பேர்ப்பட்ட கருப்பட்டியை நாம் மறந்து கொண்டிருக்கிறோம். அன்பர்களே நாம் இப்படி ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருந்தால் இறுதியில் நாம் நம் அடையாளத்தை இழந்து விடுவோம். நம் குழந்தைகளிடம் நமது உணவு முறைகளையும் அதன் மகிமைகளையும் எடுத்து கூறுங்கள். மக்கள் தொடர்ந்து கேட்டால்தான் கடைகாரர்களும் அதை வாங்கி வைப்பார்கள். நாம் வெறும் பெப்சியும் கோக்கும் மட்டும் கேட்டால் அவர்கள் அதை மட்டும்தான் மக்கள் பார்வையில் வைப்பார்கள். நாளடைவில் நமது உணவு பொருள்களும் கிடைக்காது, மறந்தும் போகும் நமது அடுத்த தலைமுறையினருக்கு.
மேலும் படிக்க......