ஞாயிறு, 29 நவம்பர், 2009

விதியும் [Fate], வினையும் [Action], விளைவும் [Consequence]!!!


விதி என்றால் என்ன? விதிக்கப்பட்டது...
வினை என்றால் என்ன? செயலாக்கப்பட்டது...
விளைவு என்றால் என்ன? விளைந்தது...

விதிக்கப்பட்டதால் செயலாக்கப்பட்டு விளைந்ததா?

இப்படி ஏகப்பட்ட கேள்விகள், குழப்பங்கள் என்று ஒரே மூளைப்புயல் நேரம் [Brain-Storming Session?? :)] எனக்குள்.

விதி யாரால் உருவாக்கப்பட்டது? கடவுள் அல்லது நம்மை இயக்கும் யாரோ ஒருவர். நாம் அறிவியல் முறைப்படி இதை கேள்விக்கு உள்ளாக்குவோம். அப்போதுதானே விடை கிடைக்கும்.

நமது சூரிய குடும்பம் மட்டுமல்லாது அண்டம், பெருவெளி எல்லாமே ஒரு காந்த மண்டலம். ஒன்றன்பால் ஒன்று ஈர்க்கப்பட்டு அப்படியே அந்தரத்தில் உள்ளன. ஒரு காந்த மண்டலத்தில் உள்ளே இருக்கும் அனைத்தும் காந்தமாக மாறிவிடுகின்றன என்பதே அறிவியல் உண்மை. எனவே உள்ளே இருக்கும் சூரியன், நமது பூமி அனைத்துமே காந்தம்தான்... நாமும்தான். அனைத்து காந்தங்களும் ஒன்றை ஒன்று ஈர்த்து அந்தரத்தில் இருக்கின்றன மற்றும் அனைத்து செயல்பாடுகளும் நடக்கின்றன.

இப்போது நாமும் காந்தம்தானே. அப்போது நமக்கும் ஈர்ப்பு சக்தி இருக்கும்தானே. ஒருவரை ஒருவர் ஈர்த்தல். மயிர்கூச்செறிதல், புல்லரித்தல் போன்ற பல வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. இதற்கு காரணம் மின் காந்த அலைகள். [ஆதாரம்: http://homeschooling.about.com/library/blsciact11.htm]

இப்போது நாம் சிந்திப்போம்... நாம் காந்த மண்டலத்தில் இருப்பது விதிக்கப்பட்டது. நாம் செய்யும் செயல்பாடுகள் வினைகள். அதனால் விளைவது விளைவுகள். மின் காந்த அலைகளினால்தான் நமது இயக்கம் சீராக இருக்கிறது என்றால்... விதியினால்தான் வினைகள் உருவாகின்றன என்று நாம் பொருள் கொள்ளலாமா?... எனவே நமது செயல்பாடுகள் ஒன்றை ஒன்று தொடர்புடையதாகிறது. நியூட்டனின் 3ஆம் விதி என்னவென்றால் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. ஆகவே விதியினால் வினை விளைகிறது. சரிதானே.

விதியை மதியால் வெல்லலாமா? நாளையும் எழுதிகிறேன்... சிறிது யோசிக்க வேண்டாமா அன்பர்களே...

4 கருத்துகள்:

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. ஆகவே விதியினால் வினை விளைகிறது. சரிதானே.....
விதியை மதியால் வெல்லலாமா? நாளையும் எழுதிகிறேன்... சிறிது யோசிக்க வேண்டாமா அன்பர்களே.../

இப்படித்தான், பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் சில 'விஞ்ஞானிகளுக்கு ஒரு விசித்திரமான கற்பனை தோன்றியதாம்! உதாரணத்துக்கு, ஒரு சைக்கிள் டைனமோவை எடுத்துக் கொள்ளுங்கள், ஆரம்பத்தில் அது இயங்கக் கொஞ்சம் மின்சாரம் செலவழியுங்கள், அது இயங்க ஆரம்பித்தவுடன், அந்த டைனமோவை வைத்துப் பல டைனமோக்களைச் சுற்ற வைத்து மின்சாரம் தயாரியுங்கள், அதில் இருந்தே முதல் டைனமோவுக்கும்...இப்படி கற்பனைச் சிறகுகளை விரித்து வைத்துக் கொண்டு தியரிகளை எக்கச்சக்கமாக, எப்போதும் வற்றாதகண்டுபிடிப்புக்களாகச் சொல்லி வைத்தார்கள்.

தியரியை, ப்ராக்டிகலாகச் செய்து பார்க்க முனைந்த போது தான், அது சாத்தியமே இல்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு,உங்கள் பதிலின் நோக்கம் தெரிகிறது. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்கிறீர்கள். ஆனால் நீங்கள் கூறிய உதாரணத்துக்கும் நான் கூறியவற்றுக்கும் சம்பந்தம் இல்லையே. எப்படி நீங்கள் இரண்டையும் ஒரே தட்டில் வைத்து பார்த்தீர்கள் என்று விளக்கினால் நானும் விளக்க காத்து இருக்கிறேன். நன்றி.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

ந்யூடனின் நிரூபிக்கப்பட்ட விதி, ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு ஈடான எதிர்விளைவு இருக்கும் என்று சொல்கிறது. காந்த ஈர்ப்பு, இன்னும் பல விஷயங்களிலும் தீர்மானிக்கப் பட்ட முடிவுகள் நிரூபிக்கப்பட்டதாகவும் கிடைக்கின்றன. ஆனால் இந்த கர்ம வினை, அதன் சுழல் என்பது நீங்கள் ஆரம்பித்திருப்பது போல தெரிந்த விஞ்ஞானத்தோடு ஒத்துப் போவதில்லை. உண்மையில், கர்மா என்பது என்ன அது ஏன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வேலை செய்கிறது என்பதை இந்த மாதிரி காந்தம், ஈர்ப்பு, வினை, எதிர் வினை என்றெல்லாம் "அறிவியல்தனமாக" விளக்கி விட முடியாது என்பதைத் தான் சொல்கிறேன்.

கர்ம வினையைப் பற்றிய மிகத் தெளிவான குறிப்புக்கள், புரிந்துகொள்வதற்கு எளிதான கதை வடிவங்களிலேயே கிடைக்கின்றன.

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு, நான் கர்ம வினையை பற்றி எங்குமே பேச வில்லை அன்பரே. நான் விதிகளை பற்றியும், வினைகளை பற்றியும் அதன் விளைவுகளை பற்றியும்
மட்டும்தான் விளக்க முனைந்துள்ளேன். மற்ற படி கர்மம், பாவம், புண்ணியம் பற்றி பேச விளையவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்தப்புவியில் நடக்கும் ஒவ்வொன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எதுவுமே தானாக நடப்பதில்லை. இது நாம் நம் வாழ்விலே கூர்ந்து கவனித்தால் விளங்கும். நான் இதைதான் கூற முற்பட்டேன்.

மேலும் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்று நாம் கற்பனைகளோ, தேற்றங்களோ [Theories] உருவாக்காமல் இருக்க முடியாது. அப்படி இருந்தால் நாம் கற்காலத்திலேயே இருந்திருக்க வேண்டியதுதான். நம் அறிவியல் இவ்வளவு முன்னேறியிருக்காது.

கருத்துரையிடுக