திங்கள், 19 அக்டோபர், 2009

அறுவை சிகிச்சையும் [Surgery] பதிற்றுப்பத்தும்

போர்க்காலங்களில் போர்வீரர்களுக்கு ஏற்படுகின்ற விழுப்புண் பெரிய அளவில் இருந்தால் அப்புண்ணை மருந்துகளால் ஆற்றுவது கடினம் என்பதை உணர்ந்து' மருத்துவ வல்லார்களால் அப்புண்கள் தைக்கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுக் கட்டுவதும் நிகழ்ந்துள்ளது. இதுவே இன்றைய நாளிலும் நடைமுறையிலுள்ளது. இவ்வாறு, விழுப்புண்ணைத் தைக்கும் முறையைப் பதிற்றுப் பத்து குறிப்பிகிறது.

“மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் ''10

நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளூசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசி.

நாம் சிந்திக்க வேண்டியது
----------------------------------------
பதிற்றுப்பத்து (பத்து + பத்து = பதிற்றுப்பத்து) எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.

இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது. இவ்வளவு தொன்மையான காலத்தில் தமிழன் அறுவை சிகிச்சையை பற்றி சிந்தித்திருக்கிறான் என்றால் நாம் தற்போது இதை வைத்து எவ்வளவு முன்னேறி இருக்கலாம் இத்துறையில். ஆனால் நாம் தற்சமயம் இதை அலோபதிக்கு தாரை வார்த்துக்கொடுத்து விட்டு உக்காந்து இருக்கிறோம். இப்போதும் ஒன்றும் கேட்டு விட வில்லை. நம் அடுத்த தலைமுறைக்கு தமிழின் மகத்துவத்தை சொல்லிக்கொடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக